செய்திகள்
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டிருக்கலாம்- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
தமிழக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக பா.ஜனதா தலைவரை தேர்வு செய்ய எல்லோரிடமும் கருத்து கேட்கப்படுகிறது. அதன் அடிப்படையில் புதிய தலைவரை கட்சி அறிவிக்கும். தமிழகத்தில் பா.ஜனதா காலம் தொடங்கி விட்டது. அதற்கு உதாரணம் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது.
பா.ஜனதாவுக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் கணிசமான வெற்றி தந்து பா.ஜனதாவுக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. கூட்டணி கட்சி ஆதரவு இல்லாமல் எங்களால் மக்கள் ஆதரவை பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.