செய்திகள்
முத்தரசன்

ஆளும் கட்சியின் விருப்பம்போல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது- முத்தரசன் குற்றச்சாட்டு

Published On 2020-01-04 09:14 GMT   |   Update On 2020-01-04 09:14 GMT
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கட்சியின் விருப்பம்போல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் மூன்றாண்டுகளாக முடக்கிப் போடப்பட்ட உள்ளாட்சி ஜனநாயகத்தை மீட்டெடுக்க எதிர்கட்சிகள் நடத்திய நீண்ட போராட்டத்தாலும், தி.மு.க. சட்டப் போராட்டத்தாலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத அ.தி.மு.க. அரசும், மாநில தேர்தல் ஆணையமும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, அதிலும் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே 2019 டிசம்பர் 27, 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி உள்ளது.

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அரசின் ஒரு பிரிவு போல் செயல்படுவது நீதிமன்றத்தில் வெளிப்பட்டது. தொடர்ந்து ஆளும் கட்சியின் அழுத்தங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் ஆளாகியதை தேர்தல் நடைமுறைகளும் வெளிப்படுத்தியுள்ளன.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆளும் கட்சியினர் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சியின் விருப்பம் போல் சில இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரு பொறுப்புக்கு போட்டியிட்ட இருவரும் வெற்றி பெற்றதாக சான்று வழங்கியிருப்பது, எதிர்கட்சியினரின் ‘மறு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கை பல்வேறு இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தடைகள், இடையூறுகளை தாண்டி, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து மகத்தான வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கும் ஆளும் கட்சியின் சட்ட அத்துமீறல்கள், அராஜக நடவடிக்கைகளை தடுத்து, விழிப்புடனும், முனைப்போடும் பணியாற்றிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகளுக்கும், ஆயிரமாயிரம் தொண்டர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

இத்தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் 7, ஒன்றிய ஊராட்சிக்குழு உறுப்பினர் 72 பேரும் மக்களின் உணர்வுகளை பிரதிபலித்து, கல்வி, குடியிருப்பு, குடிதண்ணீர், வடிகால், தெருவிளக்கு, சுகாதாரம், மருத்துவம், இணைப்பு சாலை, ஊரக வேலை உறுதியளிப்பு திட்டச் செயலாக்கம், மக்கள் நலத்திட்டங்கள் போன்றவைகளை நிறைவேற்றுவதில் அக்கறையோடும், முனைப்போடும் செயல்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News