செய்திகள்
வாக்கு பெட்டிகள்

உள்ளாட்சி தேர்தல் - நாளை வாக்கு எண்ணிக்கை

Published On 2020-01-01 04:10 GMT   |   Update On 2020-01-01 04:10 GMT
தமிழகத்தில் 2 கட்டமாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் 2 கட்டமாக நடந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள 315 வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குபெட்டிகள் நாளை திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர்த்து மீதம் உள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.



அதன்படி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 45 ஆயிரத்து 336 பதவி இடங்களுக்கான முதற்கட்ட தேர்தல் கடந்த 27-ந்தேதி நடைபெற்றது. 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானது.

அதேபோல், 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதில் 77.73 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன.

முதல் கட்ட தேர்தலின்போது, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, அரியலூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 30 வார்டுகளுக்கு, நேற்று முன்தினம் நடந்த தேர்தலோடு, மறுவாக்குப்பதிவு நடந்தது. இதில் 72.70 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.

அனைத்து வாக்குப்பெட்டிகளும் தமிழகத்தில் உள்ள 315 வாக்கு எண்ணும் மையங்களில் சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறை நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு அறை திறக்கப்படுகிறது. தொடர்ந்து காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அனைத்தும் பொதுவான வாக்கு எண்ணும் அறைக்கு முதலில் கொண்டு செல்லப்படுகிறது.

தேர்தலில் 4 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றதால், ஒவ்வொரு வாக்காளர்களும் தலா 4 வாக்குகள் பதிவு செய்து உள்ளனர் என்பதால் முதலில் ஓட்டு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டு உள்ள 30 மேஜைகளில் வாக்குச்சீட்டுகள் கொட்டப்படுகிறது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் 3 வாக்கு எண்ணுபவர்கள் பணியில் இருப்பார்கள். இவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளுக்கு பதிவான வாக்குகளை தனித்தனியாக பிரிப்பார்கள்.

பின்னர் 4 பதவிகளுக்கும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த 4 அறைகளிலும் அந்த அறைகளுக்கான வாக்குகள் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கு 8 ரவுண்டுகளாக வாக்கு எண்ணும் பணி நடக்கும். இந்தப்பணியே நாளை பகல் 1 மணி வரை நடக்க வாய்ப்பு உள்ளது. பின்னர் படிப்படியாக வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் நடக்கும் நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு அறையிலும் 2 கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் பணி பதிவு செய்யப்படுகிறது. இந்த காட்சிகளை அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட யாரும் பார்க்க முடியாது.

வாக்கு எண்ணும் மையத்தில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் ரகசியமாக வீடியோ பதிவு செய்து பாதுகாக்கப்படும். இதில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் அந்த வீடியோ காட்சிகள் பார்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட தகவலை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News