டியூசன் சென்டரில் பாலியல் தொல்லை: ஆசிரியர்-பெண் உதவியாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சென்னை:
தியாகராயநகரில் உள்ள டியூசன் சென்டரில் ஆசிரியராக வேலை பார்த்தவர் ராஜேஷ் (32). இங்கு உதவியாளராக இருந்தவர் சஞ்சனா (30).
இந்த டியூசன் சென்டரில் படித்த மாணவிகளுக்கு ராஜேஷ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இதற்கு சஞ்சனா உதவி செய்ததாக சொல்லப்பட்டது.
இதையடுத்து மாம்பலம் மகளிர் காவல் நிலைய போலீசார் சமீபத்தில் ஆசிரியர் ராஜேஷ், உதவியாளர் சஞ்சனா ஆகியோரை கைது செய்தனர். 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைதான 2 பேரும் தற்போது சிறையில் உள்ளனர். இந்த நிலையில் ராஜேஷ், சஞ்சனா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
இதையடுத்து 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த தகவல் சிறையில் இருக்கும் அவர்களுக்கு சிறைத்துறை அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இதுபோல் தென் சென்னை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் வேலு, வீரராகவன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களும் போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.