2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்கள் ஓட்டுப்போட்டனர்
சென்னை:
தமிழகத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்தது. காலை முதலே வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்குச்சாவடி மையங்களில் வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் கே.சிதம்பராபுரத்தில் உள்ள இந்து தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வந்து வரிசையில் காத்துநின்று ஓட்டுப்போட்டார்.
அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல் குமாரமங்கலம் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கு செலுத்தினார்.
அமைச்சர் கே.பி.அன்பழகன் தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கெரகோட அள்ளி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
அமைச்சர் கருப்பணன் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி வேலம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் வரிசையில் நின்று ஓட்டுப்போட்டார்.
முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிந்தகம்பள்ளி கிராமத்தில் ஓட்டு போட்டார்.