ராமேசுவரம் மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு- இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேசுவரம்:
ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 2,500 பேர் 520 விசைப்படகுகளில் மீன்பிடிக்க புறப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், நீங்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உடனே இடத்தை காலி செய்யுங்கள் என்று துப்பாக்கி முனையில் மிரட்டினர்.
உயிர் பிழைத்தால் போதும் என நினைத்த மீனவர்கள் தங்கள் படகுகளை திருப்பி கரைக்கு வர தயாரானார்கள்.
அந்த சமயத்தில் இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளுக்குள் புகுந்து மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தினர். 50-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்பட்டது.
கரை திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படை அட்டூழியத்தால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.