பேரூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு
கோவை:
கோவை பேரூர் அடுத்துள்ள ஆறுமுக கவுண்டனூர் பகுதியில் உள்ள ரோஜா நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவர் விசைத்தறி கூடம் வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று குடும்பத்தினருடன் அரசூருக்கு சென்று விட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளைபோன வீட்டை பார்வையிட்டனர். மேலும் வீட்டின் உரிமையாளர் தங்கவேலுக்கும் தகவல் கொடுத்தனர். இதை கேட்ட அவர் உடனடியாக அங்கிருந்து கிளம்பி வருகிறார். அவரிடம் விசாரித்தபோது வீட்டில் வெள்ளி, மற்றும் தங்க நகைகள் இருந்ததாக தெரிவித்தார்.
இதேபோல் தங்கவேல் வீட்டின் அருகே வசித்து வரும் சோமநாதன், கனகவேல் ஆகியோரின் வீட்டிலும் நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. இவர்கள் வெளியூருக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் ஆள் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடியுள்ளனர். வீட்டில் எவ்வளவு பணம் இருந்தது, எவ்வளவு திருடப்பட்டது என்பது தெரியவில்லை. வீட்டின் உரிமையாளர்கள் வெளியூரில் இருப்பதால் அவர்கள் வந்தபின்பு தான் எவ்வளவு நகை கொள்ளை போனது என்பது தெரியவரும். இதுகுறித்து பேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.