செய்திகள்
நகை பறிப்பு

மதுரையில் முகவரி கேட்பது போல் நடித்து பெண்களிடம் 17 பவுன் பறிப்பு

Published On 2019-12-27 09:38 GMT   |   Update On 2019-12-27 09:38 GMT
மதுரையில் முகவரி கேட்பது போல் நடித்து பெண்களிடம் 17 பவுன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை முடக்குச் சாலை இந்திராணி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சாந்தி (வயது 64). இவர் நேற்று வீட்டு திண்ணையில் அமர்ந்து இருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் ஒரு துண்டு சீட்டை காண்பித்து சாந்தியிடம் முகவரி கேட்பதுபோல் நடித்தனர். திடீரென அந்த நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சாந்தி கழுத்தில் கிடந்த 15 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மதுரை கோவலன் நகரைச் சேர்ந்தவர் சேது ராமன். இவரது மனைவி பொன்னம்மாள் (65). இவர், நேற்று காலை வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பொன்னம்மாளை மறித்து 2 பவுன் செயினை பறித்துச் சென்றனர்.

சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரையில் கடந்த சில மாதங்களாகவே நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. கொள்ளையர்கள் போலீசில் சிக்காமல் தைரியமாக கைவரிசை காட்டி வருகின்றனர். குறிப்பாக மூதாட்டிகளை குறிவைத்து நகை பறிக்கும் சம்பவம் அண்மைக்காலமாக நடந்து வருகிறது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News