செய்திகள்
ஓ பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் - வாக்காளர்களுக்கு ஈபிஎஸ் ஓபிஎஸ் வேண்டுகோள்

Published On 2019-12-26 01:17 GMT   |   Update On 2019-12-26 01:17 GMT
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் என்று வாக்காளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை:

ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களாட்சித் தத்துவத்தின் ஆணிவேராகவும், ஆரம்பப் புள்ளியாகவும் திகழும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க இருக்கும் வாக்காளப் பெருமக்கள், தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி வரும் வளர்ச்சிப் பணிகளை எண்ணிப் பார்த்து தங்களது பொன்னான வாக்குகளை அ.தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ‘இரட்டை இலை’ சின்னத்திலும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னங்களிலும் வழங்கிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போது, 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு அமோக ஆதரவு அளித்த வாக்காளர்கள் ஜெயலலிதாவே இப்போது நேரில் வந்து வாக்கு கேட்பதாக எண்ணி, அவரின் நினைவுகளுக்கு புகழ் சேர்க்கும் வகையிலும், அவருக்கு அன்புடன் நன்றி கூறும் முகத்தானும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி உங்கள் முன் நிற்கிறோம்.

கிராமப்புற மக்களுக்கான நலத் திட்டங்களும், வளர்ச்சிப் பணிகளும் தமிழ் நாட்டில் நிறைவேற்றப்படும் வேகத்தையும், ஒழுங்கையும் கண்டு மற்ற மாநிலங்கள் எல்லாம் வியப்படைகின்றன. ஊரக நிர்வாகத்தில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான் என்று மத்திய அரசு பாராட்டி பரிசு அளிக்கிறது. இப்பணிகள் எல்லாம் மேலும் தொடர உங்கள் நல்லாதரவை நாடி நிற்கிறோம்.

மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, உள்ளாட்சி நிர்வாகத்தில் ஈடுபடும்போது, மத்திய-மாநில அரசுகளின் முழுமையான ஒத்துழைப்பைப் பெறுவதோடு, மத்திய-மாநில அரசுகளோடு தோளோடு தோள் நின்று புதிது புதிதாக திட்டங்களையும், நிதி ஆதாரத்தையும் பெற்று வந்து உங்கள் பகுதிகளின் வளர்ச்சியில் முழுமையாக அக்கறை காட்டுவார்கள் என்ற உத்தரவாதத்தை வாக்காளர்களுக்கு நாங்கள் அளிக்கிறோம்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஆகியோர் ஊரகப் பகுதிகளின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர்கள். அ.தி.மு.க. அரசு அந்த இருபெரும் தலைவர்களின் பாதையில் ஊரகப் பகுதிகளின் மேம்பாட்டில் மிகுந்த அக்கறைகொண்டு செயல்படுகிறது. அப்பணிகள் தொடர சிறப்பான வெற்றியை ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு அளிப்பீர்கள் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உண்டு.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து அறிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News