செய்திகள்
விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்றபோது எடுத்தபடம்.

விவேகானந்தர் நினைவு மண்டபத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்

Published On 2019-12-25 20:13 GMT   |   Update On 2019-12-25 20:13 GMT
கன்னியாகுமரி வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடலில் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டார். சூரியன் மறையும் காட்சியையும் ரசித்தார்.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து பொன் விழா இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும் விழா இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து இறங்கினார். அப்போது அவரது மனைவி சவிதா கோவிந்த், மகள் சுவாதி கோவிந்த் ஆகியோரும் உடன் வந்தனர்.

ஜனாதிபதிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பிறகு தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து பூம்புகார் படகு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான ‘விவேகானந்தா’ என்ற படகில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தன்னுடைய குடும்பத்தினருடன் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்றார். அவருடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் சென்றார்.

முதலில் அங்குள்ள ஸ்ரீபாத மண்டபத்துக்கு ஜனாதிபதி சென்றார். அங்கு பகவதியம்மன் பாதம் பதிந்த இடத்தில் மலர்களை தூவி வணங்கினார். பின்னர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஷர் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிப்பார்த்த அவர் அங்கிருந்தபடியே அருகே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து தியான மண்டபத்துக்கு சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கு சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர் அவர் குடும்பத்தினருடன் சூரியன் மறையும் காட்சியை பார்த்து ரசித்தார்.

இதைத்தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து மாலை 6.15 மணிக்கு அதே படகு மூலம் அவர் புறப்பட்டார். 6.25 மணிக்கு மீண்டும் கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்தார்.

ஜனாதிபதி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த பாதுகாப்பில் சுமார் 1,500 போலீசார் ஈடுபட்டு இருந்தனர். 
Tags:    

Similar News