நிலக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியரிடம் தங்க செயின் பறிப்பு
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை துள்ளுபட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 45). இவர் நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் அங்கன்வாடி குழந்தைகளை மையத்தில் இருந்து வீட்டில் கொண்டு விடுவதற்காக அழைத்துச் சென்றார். அங்குள்ள பெருமாள் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக மொபட்டில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென மகாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத மகாலட்சுமி நிலைதடுமாறி ரோட்டில் விழுந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். பொதுமக்கள் திரண்டு வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பி விட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் உருவம் பதிவாகியுள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.