செய்திகள்
மழை நிலவரம்

தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

Published On 2019-12-23 03:44 GMT   |   Update On 2019-12-23 03:44 GMT
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை:

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி, டிசம்பர் மாதம் நிறைவடையும். அந்தவகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் இருக்கிறது. இதுவரை தமிழகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெறும் இயல்பான மழை அளவை விட 4 சதவீதம் அதிகமாக மழை கிடைத்துள்ளது.

இருப்பினும் பல மாவட்டங்களில் இன்னும் இயல்பான மழையை பெறவில்லை. அதில் சென்னை 16 சதவீதம் குறைவான மழை அளவை பெற்றுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் எந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமோ, புயலோ இல்லாமல் வெறும் மேலடுக்கு சுழற்சியாலேயே மழை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் மேலடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை இருக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

இந்திய பெருங்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்துக்கு (இன்று) தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், காயல்பட்டினத்தில் மட்டும் ஒரு செ.மீ. மழை பெய்தது.


Tags:    

Similar News