செய்திகள்
திருட்டு

பாடாலூர் அருகே வீட்டை திறந்து 21 பவுன் நகைகள் திருட்டு

Published On 2019-12-18 17:51 GMT   |   Update On 2019-12-18 17:51 GMT
பாடாலூர் அருகே வீட்டை திறந்து 21 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, குரூர் கிராமம் சாவடி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 55). விவசாயியான இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சாவியை அருகில் உள்ள ஜன்னல் ஓரத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சுப்பிரமணி சென்ற சிறிது நேரத்தில் ஜன்னல் ஓரத்தில் இருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 21 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர்.

இந்த நிலையில் மாலையில் வீடு திரும்பிய சுப்பிரமணியன் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தப்போது, வீட்டில் இருந்த 21 பவுன் தங்க நகைகள் திருடுபோய் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து அவர் உடனே பாடாலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News