செய்திகள்
தமிழக சட்டசபை

கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது

Published On 2019-12-15 09:50 GMT   |   Update On 2019-12-15 11:52 GMT
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் அடுத்த மாதம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்குகிறது.

சென்னை:

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் அடுத்த மாதம் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 28-ந் தேதி தொடங்கி ஜூலை 20-ந்தேதி வரை நடைபெற்றது. துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மற்றும் பல்வேறு சட்ட மசோதாவும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன.

6 மாதத்திற்குள் சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்பதால் அடுத்த மாதம் (ஜனவரி) 19-ந்தேதிக்குள் சட்ட சபையை கூட்ட வேண்டும்.

அந்த வகையில் பொங்கலுக்கு முன்பாக சட்டசபை கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந்தேதியுடன் முடிந்து புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் ஜனவரி 6-ந்தேதிக்குள் நடைபெறும்.

அதன்பிறகு சட்டசபையை கூட்டி 12-ந்தேதிக்குள் சபை கூட்டத் தொடரை முடிக்க ஏற்பாடு நடந்து வருவதாக சட்டபேரவை செயலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

2020-ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் கூட்டம் தொடங்க உள்ளது. கவர்னர் உரை நிகழ்த்தியதும் அதற்கு மறுநாள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெறும்.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2-ந்தேதி வந்து விடும் என்பதால் சட்டசபையில் ஆளும் கட்சி-எதிர்க்கட்சியின் அனல்பறக்கும் விவாதங்களை எதிர்பார்க்க முடியும்.

Tags:    

Similar News