செய்திகள்
பொன் மாணிக்கவேல்

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைத்தார்

Published On 2019-12-15 08:58 GMT   |   Update On 2019-12-15 11:48 GMT
பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.

சென்னை:

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன் மாணிக்கவேல் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

இதையடுத்து பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக சென்னை ஐகோர்ட்டு நியமித்தது. ஒரு ஆண்டு பணியாற்றிய அவரது பதவி காலம் கடந்த மாதம் 30-ந் தேதியுடன் முடிவடைந்தது.

அவரிடம் உள்ள சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

 


இதில் வழக்கு ஆவணங்களை சிலை கடத்தல் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ஆவணங்களை தாக்கல் செய்யாத பொன் மாணிக்கவேல் மீது தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒரு வாரத்தில் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஆவணங்களை சரிபார்த்த பிறகு அதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார். ஆவணங்கள் அனைத்தையும் அவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.க்கு அனுப்பி உள்ளார்.

Tags:    

Similar News