செய்திகள்
கைது

கொளத்தூர் பெயிண்டர் கொலையில் வாலிபர் கைது

Published On 2019-12-14 09:25 GMT   |   Update On 2019-12-14 09:25 GMT
கொளத்தூர் பெயிண்டர் கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

கொளத்தூர் சத்திய சாய் நகரை சேர்ந்தவர் முருகன் என்ற சுரேஷ்குமார். பெயிண்டர். இவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 2 ஆண்டுக்கு முன்பு அவரை பிரிந்து பிளாட்பாரத்தில் வசித்து வந்தார்.

நேற்று இரவு முருகன் திரு.வி.க.நகர் பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் பாரில் மதுகுடிக்க சென்றார். அப்போது அவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.

இதில் அந்த வாலிபர் கத்தியால் முருகனின் வலது காலில் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டார். இதில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி முருகன் உயிருக்கு போராடினார். அவரை மீட்டு பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் முருகனை கத்தியால் குத்தியது கொளத்தூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பது தெரிய வந்தது. இவர் தனியார் டி.வி. ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் முருகன், அடிக்கடி அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து மது குடிப்பது வழக்கம். இதனால் சந்தோஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. நேற்று இரவு முருகனிடம் சந்தோஷ்குமார் மது குடிக்க பணம் கேட்டு உள்ளார். அவர் பணம் தர மறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் கத்தியால் வெட்டி விட்டு ஓடிவிட்டார் என்பது தெரிய வந்தது.

Tags:    

Similar News