செய்திகள்
கொலை (கோப்புப்படம்)

திருவெண்ணைநல்லூர் அருகே 2½ வயது பெண் குழந்தை கழுத்தை நெரித்து கொலை

Published On 2019-12-13 11:20 GMT   |   Update On 2019-12-13 11:20 GMT
திருவெண்ணைநல்லூர் அருகே குடும்ப தகராறு காரணமாக 2½ வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று தந்தை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவெண்ணைநல்லூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த தட்டாம்பாளையம் சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 30). இவருக்கும் விழுப்புரம் அருகே உள்ள ஒட்டேரிபாளையத்தை சேர்ந்த சிவரஞ்சனி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு அர்ச்சனா (வயது 5), கவியரசி (2 ½) ஆகிய பெண் குழந்தைகள் இருந்தனர்.

புருஷோத்தமன் குடும்பத்துடன் சென்னையில் தங்கி ஒரு தனியார் கம்பெனியில் கார் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். அவரது மனைவி சிவரஞ்சனி அங்கு ஒரு வீட்டில் வேலைபார்த்து வந்தார்.

இந்த நிலையில் புருஷோத்தமனுக்கும் சிவரஞ்சினிக்கும் இடையே குடும்பதகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த புருஷோத்தமன் தனது 2 குழந்தைகள் அர்ச்சனா, கவியரசி ஆகியோரை அழைத்து கொண்டு விழுப்புரம் மாவட்டம் அரசூர் வந்தார்.

இரவு 9 மணியளவில் அவர் தனது 2 மகள்களையும் இருவேல்பட்டு சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது அவர் திடீரென்று 2-வது மகள் கவியரசி கழுத்தை நெறித்தார். இதை பார்த்ததும் அர்ச்சனா அங்கிருந்து ஓடிவிட்டார்.

கழுத்து நெரிக்கப்பட்ட கவியரசி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். அதன்பின்பு புருஷோத்தமன் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து கீழே விழுந்தார்.

அப்போது அவர் தனது உறவினர்களுக்கு தான் வி‌ஷம் குடித்து விட்டதாகவும் இளையமகள் கவியரசி இறந்து விட்டதாகவும் செல்போனில் கூறினார்.

இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்றனர். அங்கு சுடுகாட்டு அருகே சிறுமி பிணமாக கிடப்பதையும் புருஷோத்தமன் மயங்கி கிடப்பதையும் பார்த்தனர். உடனடியாக புருஷோத்தமனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது நிலை மோசமாக உள்ளது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News