செய்திகள்
கோப்பு படம்

மதுரையில் கல்லூரி மாணவியை கற்பழிக்க முயற்சி- ஈவ்டீசிங் வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2019-12-13 11:05 GMT   |   Update On 2019-12-13 11:05 GMT
மதுரையில் 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவியை கற்பழிக்க முயன்ற ஈவ்டீசிங் வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை:

அண்மையில் ஐதராபாத்தில் தனியாக சென்ற டாக்டர் பிரியங்கா (வயது27) என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று கற்பழித்ததோடு, உயிரோடு எரித்துக் கொலை செய்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதில் கைதான 4 குற்றவாளிகளை தெலங்கானா போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். பெண்களுக்கு உதவும் வகையில் ‘காவலன்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் போலீசாரும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். பெண்கள் மீதான குற்றத்தை தடுக்க போலீசார் இரவு நேர ரோந்தை அதிகப்படுத்தி உள்ளனர். இருப்பினும் பெண்களிடம் தொந்தரவு செய்யும் கும்பலின் அட்டகாசம் குறையவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இதன் உச்சகட்டமாக கல்லூரி மாணவியை கற்பழிக்க முயன்ற சம்பவம் மதுரையில் நடந்து உள்ளது.

மதுரை காளவாசல் முடக்குசாலை பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி தினமும் கல்லூரிக்கு சென்று வரும்போது அங்குள்ள தெருமுனையில நிற்கும் வாலிபர் கேலி-கிண்டல் செய்து வந்துள்ளார். பல முறை எச்சரித்தும் அந்த வாலிபர் திருந்தவில்லை.

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த மாணவி கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்ல முடக்குசாலை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வாலிபர், மாணவியை மறித்து தகராறு செய்ததோடு, கையை பிடித்து தரதரவென இழுத்து சென்றான். பின்னர் அங்குள்ள முட்புதரில் மாணவியை கற்பழிக்க முயன்றான். அப்போது அவர் கூச்சலிட்டதால் அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர். இதைபார்த்த அவன் அங்கிருந்து தப்பினான்.

இந்த சம்பவம் தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கற்பழிக்க முயன்றவனை தேடி வருகின்றனர்.

மதுரை கீரைத்துறை புதுமாகாளிப்பட்டி நாகு பிள்ளை தோப்பு 40 அடி ரோட்டில் நாள் தோறும் ஒரு கும்பல் அந்த வழியாக செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்வது தொடர்ந்து நடந்து வந்துள்ளது. கீரைத்துறையை சேர்ந்த பழனிகுமார் என்ற ஆட்டோ டிரைவர் பெண்களை மறித்து ஆபாசமாக பேசி, தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த நாகநாத் (வயது 50) என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பழனிகுமார், நாகநாத்தை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் தேப்படுத்தியுள்ளார். காயமடைந்த நாகநாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிக்குமாரை தேடி வருகின்றனர்.

மதுரை நகரில் தற்போதும் பஸ் நிறுத்தம் மற்றும் பல்வேறு இடங்களில் நிற்கும் ரோமியோக்கள் அந்த வழியாக செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்வதும், அவர்களை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுப்பதும் நடந்து வருகிறது. இதனால் கல்லூரி, வேலைக்கு செல்லும் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

குறிப்பாக கீரைத்துறை, மாகாளிப்பட்டி, வில்லாபுரம், மீனாட்சிநகர், அனுப்பானடி, செல்லூர், அவனியாபுரம், ஜெய்ஹிந்த் புரம், சோலையழகுபுரம், வண்டியூர், தற்காலிக பஸ் நிலையங்களான ஹையத்கான் ரோடு, திருப்பரங்குன்றம் ரோடு, கிரைம் பிராஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் ரோமியோக்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

ஐதராபாத் சம்பவத்தை போல் மதுரையில் நடப்பதற்கு முன் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News