செய்திகள்
டாக்டர் மனோஜ்குமார், நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கி இருந்தபோது

நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து திரும்பிய பெரியகுளம் டாக்டர் மாயம்

Published On 2019-12-13 08:54 GMT   |   Update On 2019-12-13 09:33 GMT
நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து திரும்பிய பெரியகுளம் டாக்டர் மனோஜ்குமார் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:

நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து திரும்பிய டாக்டர் மீண்டும் மாயமானதால் அவர் கைலாசா நாட்டுக்கு சென்றாரா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை சுப்பிரமணிய சாவடி தெருவைச் சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் மனோஜ்குமார் (33). எம்.பி.பி.எஸ். முடித்து தேவாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.



இவர் தனது சகோதரி வனிதாவின் மகள் நிவேதா (21) என்பவருடன் நித்யானந்தா ஆசிரமத்துக்கு கடந்த வருடம் சென்றார். அதன் பிறகு அவர்கள் 2 பேரும் வீடு திரும்பவில்லை. நித்யானந்தாவிடம் தீட்சை பெற்று பெங்களூரில் உள்ள அவரது ஆசிரமத்தில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

அவர்களை பார்க்க சென்ற மனோஜ்குமாரின் உறவினர்களை ஆசிரம ஊழியர்கள் விரட்டியடித்தனர். இதனால் தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் பெங்களூர் சென்றனர்.

அங்கு கர்நாடக போலீசார் உதவியுடன் நித்யானந்தா பிடதி ஆசிரமத்தில் இருந்த டாக்டர் மனோஜ் குமார் மற்றும் நிவேதாவை மீட்டு வந்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வீட்டுக்கு வந்த மனோஜ் குமார் ஓரிரு நாட்களிலேயே தன்னால் இங்கு இருக்க முடியாது என்றும் தான் ஆசிரமத்துக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றார். அதன் பிறகு பெற்றோர்கள் சமாதானம் செய்து மீண்டும் வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனையடுத்து தேவாரம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு மாதமாக மீண்டும் மனோஜ்குமார் மாயமானார். அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தற்போது நித்யானந்தா குறித்த பரபரப்பு வீடியோ வெளியாகி வரும் நிலையில் கைலாசா நாட்டுக்கு செல்ல ஏராளமானோர் இணையதளத்தில் முன்பதிவு செய்து வருவதாகவும் அறிந்தனர். இதனால் தனது மகனும் நித்யானந்தா இருக்கும் கைலாசா நாட்டுக்கு சென்று விட்டாரா? என அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை காந்தி புகார் அளித்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Tags:    

Similar News