செய்திகள்
பின்னால் வந்தபோது விபத்து: லாரி-சுவருக்கு இடையில் சிக்கிய லோடுமேன்
குடோனில் வேலைசெய்து கொண்டிருந்த லோடுமேன் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் அவரது வலது கை லாரிக்கும் சுவருக்கும் இடையில் சிக்கி கொண்டது.
புதுச்சேரி:
புதுவை உருளையன் பேட்டை 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கமல்வாசன் (வயது41). இவர் லோடு மேனாக வேலைசெய்து வருகிறார். நேற்று இவர் பெரியார்நகரில் உள்ள தனியார் மதுபான குடோனில் வேலைசெய்து கொண்டிருந்தார்.
அப்போது ஜெயக்குமார் என்பவர் தனது லாரியை பின்னோக்கி நகர்த்தினார். இதில் எதிர்பாராதவிதமாக லாரி சுவர் மீது மோதி கமல்வாசனின் வலது கை லாரிக்கும் சுவருக்கும் இடையில் சிக்கி கொண்டது. இதனால் கமல்வாசன் வலதுகையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபரேசன் செய்யப்பட்டது. இதனையடுத்து கமல்வாசன் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் ஜெயக்குமாரை தேடி வருகிறார்கள்.