செய்திகள்
போச்சம்பள்ளி அருகே நிலப்பிரச்சனை காரணமாக பெண்ணை தாக்க முயன்றவர் கைது
நிலப்பிரச்சனை காரணமாக பெண்ணை தாக்க முயன்றவரை போலீசார் கைது செய்து ஊத்தங்கரை சப்-ஜெயிலில் அடைத்தனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜமுக்குடபட்டி பகுதியை சேர்ந்தவர் மாதம்மாள் (வயது 50) விவசாயி. கொல்லகெட்டாய் பகுதியை சேர்ந்த மணி (எ) லிங்கம் (60) விவசாயி. இவர்கள் இருவருக்கும் 1 ஏக்கர் 47 சென்ட் நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் 1 ஏக்கர் 47 சென்ட் நிலம் மாதம்மாலுக்கே சொந்தமாகும் என கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை அடுத்து மாதம்மாள் தனது நிலத்தில் வாழை மரங்கள் பயிர் செய்திருந்தார். நேற்று மாதம்மாள் நிலத்தில் இருந்த வாழை மரங்களை முன்விரோதம் காரணமாக மணி வெட்டி சாய்த்துள்ளார். இதனை தட்டிக்கேட்க முயன்ற மாதம்மாளையும் அவர் தாக்க முயன்றுள்ளார். பின்னர், அவரிடம் இருந்து தப்பித்துவந்த அவர் போச்சம்பள்ளி போலீஸ்சில் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து மணி என்கின்ற சிவலிங்கத்தை கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஊத்தங்கரை சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார்.