திருமுல்லைவாயல் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
ஆவடி:
திருமுல்லைவாயலை அடுத்த அண்ணனூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் வரதன். கருவூலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த 4-ந் தேதி அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மேடவாக்கத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை அவரது வீட்டின் கதவு உடைந்து கிடந்தது. இதுபற்றி பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் வரதனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் விரைந்து வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ. 50 ஆயிரம் ரொக்கம், 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
திருமுல்லைவாயலை அடுத்த அயப்பாக்கம் அபர்ணா நகர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்.
இவரது மனைவி அமுத வல்லி. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றார்.
மதியம் அவர் திடீரென வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. சந்தேகம்அடைந்த அமுதவல்லி கதவை தட்டியபடி உள்ளே சென்றார்.
அப்போது வீட்டுக்குள் பதுங்கி இருந்த மர்ம வாலிபர் வெளியே ஓடினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அமுதவல்லி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் தப்பி ஓடிய வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து திருமுல்லைவாயல் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவன் சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்த உதயா என்பதும், நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து வந்து கொள்ளையடிக்க முயன்றதும் தெரிந்தது.
இதையடுத்து போலீசார் உதயா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவனிடம் கூட்டாளிகள் குறித்து விசாரணை நடக்கிறது.
திருமுல்லைவாயல் சோழம்பேடு சாலையில் ராஜேஷ் என்பவர் நண்பர்கள் 4 பேருடன் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார்.
அனைவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று இரவு அவர்கள் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கினர். இன்று காலை எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த 4 செல்போன்கள். லேப்-டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று இருந்தனர்.