செய்திகள்
பொருட்கள் கருகி இருப்பதை படத்தில் காணலாம்.

திண்டுக்கல்லில் சிலிண்டர் வெடித்து வீட்டில் தீப்பிடித்தது: தாய்-மகள் உயிர் தப்பினர்

Published On 2019-12-10 17:18 GMT   |   Update On 2019-12-10 17:18 GMT
திண்டுக்கல்லில் இன்று கலை சிலிண்டர் வெடித்து வீட்டில் தீப்பிடித்தது. இதில் தாய், மகள் உயிர் தப்பினார்கள்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் பஸ் நிலையம் அருகில் உள்ள வி.எம்.ஆர். பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 70). இவரது கணவர் இறந்துவிட்டார். இதையடுத்து அவர் தனது மகள் அங்குலட்சுமியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பாக்கியலட்சுமி வீட்டிற்கு வெளி பகுதியில் துணி துவைத்து கொண்டிருந்தார்.

சமையல் அறையில் மகள் அங்குலட்சுமி சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் எரிவாயு கசிந்து திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் கதவு ஜன்னல்கள் உடைந்து சமைத்துக் கொண்டிருந்த அங்குலட்சுமி மற்றும் பாக்கியம்மாள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

பயங்கர சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். மயக்க நிலையில் இருந்த இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் அறிந்த தீயணைப்பு துறையினர் நிலைய அதிகாரி அருள்ராஜ் தலைமையில் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை மேற் கொண்டனர், விசாரணையில் சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு இணைக்கப்பட்டிருக்கும் டியூபில் எரிவாயு கசிந்து வீட்டில் பரவியதால் வெடி சத்தத்துடன் விபத்து நடந்திருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News