செய்திகள்
பேராவூரணியில் ஜெராக்ஸ் கடைக்காரரின் வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை
பேராவூரணியில் ஜெராக்ஸ் கடைக்காரரின் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பேராவூரணி:
பேராவூரணி ஏ.வி. நகரை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 53). இவர் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் அங்கு வந்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகையை திருடி கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து அறிந்த ஜெயபாலின் உறவினர் பேராவூரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.