செய்திகள்
கைது

திருச்செந்தூர் அருகே வேனை திருடிய வாலிபர் கைது

Published On 2019-12-10 07:51 GMT   |   Update On 2019-12-10 07:51 GMT
திருச்செந்தூர் அருகே வேனை திருடிய நெல்லை வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர்:

குரும்பூர் அருகே உள்ள ஏரல் மூப்பனார் மாடத் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது50). சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவர் தினமும் காலையில் தனது வேனில் ஏரலில் இருந்து திருச்செந்தூருக்கு கல்லூரி மாணவிகளை அழைத்து செல்வார்.

பின்பு அங்கேயே வேனை நிறுத்தி விட்டு மாலையில் கல்லூரி முடிந்ததும் திரும்பவும் மாணவிகளை அழைத்து வருவது வழக்கம்.இந்நிலையில் நேற்று வழக்கம் போல் மாணவிகளை கல்லூரியில் இறக்கி விட்டு சாலையோரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் கண்ணன் டீ குடித்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் கண்ணனின் வேனை கண் இமைக்கும் நேரத்தில் ஓட்டி சென்றார். இதில் அதிர்ச்சியடைந்த கண்ணன் உடனடியாக அப்பகுதியில் நின்ற கார் ஒன்றை எடுத்து கொண்டு வேனை துரத்தி சென்றார்.

திருச்செந்தூர் அருகே உள்ள நாலுமூலைகிணறு பகுதியில் சென்ற போது வேனை கண்ணன் மடக்கி பிடித்தார். பின்பு அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து திருச்செந்தூர் போலீசில் ஒப்படைத்தார். அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவரது பெயர் அய்யனார் (26) என்பதும், நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வேனை திருடியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News