செய்திகள்
விபத்து (கோப்புப்படம்)

வாசுதேவநல்லூரில் விபத்து- தனியார் கல்லூரி பேருந்து மோதி மாணவர் பலி

Published On 2019-12-10 07:47 GMT   |   Update On 2019-12-10 07:47 GMT
வாசுதேவநல்லூரில் தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகிரி:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் செண்பக கால் ஓடை பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவருடைய மகன் மாரிச்செல்வம் (வயது 19). அதே ஊரை சேர்ந்த பங்களா தெருவை சேர்ந்த மைதீன் என்பவருடைய மகன் முகம்மதுஅப்துல் ரஹீம்( 19). நண்பர்களான இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

நேற்று இருவரும் பழுதாகிய மொபட்டை எடுப்பதற்காக விருதுநகர் மாவட்டம் சிவகாசி சென்றனர். பின்பு இருவரும் அந்த மொபட்டில் நேற்று மாலை வாசுதேவநல்லூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். சிவகிரி அருகே உள்ள மொட்டமலை பகுதியில் வரும்போது பின்னால் வந்த ஒரு தனியார் கல்லூரியின் பேருந்து அவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

அப்போது அவ்வழியாக சென்றவர்கள் பலத்த காயமடைந்து, ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்கள் குறித்து சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சிவகிரி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விரைந்து சென்று இருவரையும் சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரிச்செல்வம் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த முகமது அப்துல் ரஹீமை மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி தனியார் கல்லூரி பேருந்து டிரைவரான ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு வளையப்பட்டி தெருவை சேர்ந்த ராஜபாண்டியன்(53) என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News