செய்திகள்
கோப்பு படம்

முத்தையாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

Published On 2019-12-09 12:22 GMT   |   Update On 2019-12-09 12:22 GMT
உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததால் முத்தையாபுரம் காவல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
முள்ளக்காடு:

தூத்துக்குடி ஒன்றியம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்குட்ட பகுதியில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.

இந்நிலையில் முள்ளக்காடு, பொட்டல்காடு, குலையன்கரிசல் பகுதியில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இது தொடர்பாக விவசாயிகள் பொட்டல்காடு விலக்கு பகுதியில் வருகிற 12-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். பின்னர் அவர்கள் போராட்டம் நடத்த அனுமதி வேண்டி முத்தையாபுரம் போலீஸ் நிலையத்திற்கு விவசாயிகள் சென்றனர். ஆனால் போலீசார் பொட்டல்காடு விலக்கு பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக ஏற்படும். மேலும் இந்த பகுதியில் கல்லூரி உள்ளது. எனவே அங்கு போராட்டம் நடத்த அனுமதி மறுத்தனர்.

இதனால் முத்தையாபுரம் காவல் நிலையத்தை சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டனர். முற்றுகையிட்ட விவசாயிகளிடம் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News