கூடலூர் அருகே டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது
கூடலூர்:
கூடலூர் பகுதியில் மணல் கடத்தி தோட்டங்களில் பதுக்கி வைக்கின்றனர். இரவு நேரங்களில் டிராக்டர் மற்றும் லாரிகளில் கடத்தி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் தலைமைக் காவலர்கள் மணிவண்ணன், செந்தில்குமார் மற்றும் போலீசார் மட்டைப்பாறை ஓடை பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை மறித்தனர்.
அதனை சோதனையிட்டதில் மணல் திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக கல்யாணி (வயது 44) என்பவரை கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முல்லைப் பெரியாறு 18-ம் கால்வாய் பகுதியில் தோட்டத்தில் மணல் பதுக்கியது தெரிய வந்தது. இது குறித்த புகாரை தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் டிராக்டருடன் மணல் கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார். தற்போது மேலும் ஒருவர் பிடிபட்டுள்ளார். தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என இன்ஸ்பெக்டர் எச்சரித்துள்ளார்.