செய்திகள்
கோப்பு படம்

சங்கரன்கோவிலில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது - 3 பேருக்கு வலைவீச்சு

Published On 2019-12-09 10:57 GMT   |   Update On 2019-12-09 10:57 GMT
சங்கரன்கோவில் அருகே போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார். இவர் நேற்று காலையில் அங்குள்ள பள்ளிவாசல் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது சங்கரன் கோவில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மகேஷ்(வயது 30) மற்றும் அவரது நண்பர்கள் சிலர் தனது நண்பரின் திருமணத்திற்காக சங்கரன்கோவில்- கழுகுமலை ரோட்டில் உள்ள பள்ளிவாசல் முன்பு பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. பள்ளிவாசல் முன்பு பட்டாசு வெடிக்க ஏற்கனவே போலீஸ் தரப்பில் தடை விதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் பட்டாசு வெடித்தனர். இதை செந்தில்குமார் தட்டிக்கேட்டுள்ளார். உடனே அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் செந்தில்குமார் பணி முடிந்து நேற்று இரவு சங்கரன்கோவில் அருகே உள்ள காந்திநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார். அப்போது, அங்கு வந்த மகேஷ் உள்ளிட்ட 4 பேர் திடீரென்று வீட்டிற்குள் புகுந்து செந்தில்குமாரை சரமாரியாக தாக்கி விட்டு, தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சங்கரன் கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து போலீசார் இன்று மகேசை கைது செய்தனர். மேலும் தாக்குதலில் தொடர்புடைய மகேஷின் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த செல்லதுரை, முத்துக்குட்டி உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News