திருமணத்துக்கு பெண்தர மறுத்ததால் என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை
சேதராப்பட்டு:
சேதராப்பட்டு முத்தமிழ்நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவர் சொந்தமாக லேத்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் ஜான்சன் (வயது27). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் லேத் பட்டறையை தனது தந்தையுடன் சேர்ந்து நிர்வகித்து வருகிறார்.
எப்போதும் வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு வீட்டின் மாடியில் உள்ள அறையில் ஜான்சன் தூங்க செல்வது வழக்கம். ஆனால் நேற்று வெகுநேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஜான்சனின் தங்கை எலிசபெத் கதவை தட்டியுள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
உடனே ஜான்சனின் தந்தை ஜோசப் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஜான்சன் கேபிள் வயரால் தூக்குபோட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த சேதராப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
ஜான்சனுக்கு திருமணத்துக்கு பெண் பார்த்து வந்தனர். கடந்த ஆண்டு அவருடைய லேத்பட்டறையில் ஏற்பட்ட விபத்தில் மெஷினில் அவரது கை சிக்கியதில் 2 விரல்கள் துண்டானது.
இதனால் அவருக்கு பெண்தர பலரும் மறுத்து விட்டனர். இதனால் விரக்தி அடைந்த ஜான்சன் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.