பூதப்பாண்டி அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் திடீர் மரணம்
நாகர்கோவில்:
பூதப்பாண்டியை அடுத்த இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து. தொழிலாளி. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மீனா(வயது21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியது. காதலர்கள் தனிமையில் சந்தித்து பேசினார்கள். இதில் மீனா கர்ப்பமானார். காதலர்கள் தனிமையில் சந்தித்து வந்தது இரு வீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது.
இதையடுத்து இரு வீட்டு பெற்றோரும், உறவினர்களும் கலந்து பேசி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த மீனாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மீனா திடீரென இறந்தார்.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச் செல்வன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
திருமணம் முடிந்து சில மாதங்களில் புதுப்பெண் இறந்ததால் ஏ.எஸ்.பி. ஜவகர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.