செய்திகள்
கைது

கோவையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு- ஆசிரியர் கைது

Published On 2019-12-09 05:19 GMT   |   Update On 2019-12-09 05:19 GMT
கோவையில் 14 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை:

கோவை பி.என்.புதூர் அருகே உள்ள ஆனந்தா நகரை சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியம். இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கனடாவில் வசித்து வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் சங்கர சுப்பிரமணியத்தின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் இறந்தனர்.

அதன் பின்னர் சங்கர சுப்பிரமணியம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு திரும்பினார். பின்னர் பி.என்.புதூரில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசித்து வருகிறார்.

தற்போது சங்கர சுப்பிரமணியம் தனியார் பள்ளிகளுக்கு சென்று ஆங்கில பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்தார். அப்போது கோவை ராம்நகரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 14 வயது மாணவியின் பழக்கம் ஏற்பட்டது.

அந்த மாணவி ஆசிரியர் சங்கர சுப்பிரமணியத்திடம் தனது தந்தை குடிகாரர் என்றும், தனது தாய் தான் வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வருவதாகவும் கூறினார். அதற்கு ஆசிரியர் சங்கர சுப்பிரமணியம் மாணவியிடம் ஆறுதலாக வார்த்தைகள் கூறி என்ன உதவி வேண்டும் என்றாலும் செய்வதாக மாணவியின் தாயை சந்தித்து கூறினார்.

பின்னர் சங்கர சுப்பிரமணியம் மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். மாணவி தனியாக இருக்கும் போது பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனை மாணவி வெளியே செல்லாமல் இருந்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி படிக்கும் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது மாணவி ஆங்கில ஆசிரியர் சங்கர சுப்பிரமணியம் கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்து தனது பள்ளி ஆசிரியர்களிடமும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினரிடமும் புகார் தெரிவித்தார்.

அவர்கள் இது குறித்து மத்திய அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆங்கில ஆசிரியர் சங்கர சுப்பிரமணியத்தை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News