செய்திகள்
வீட்டுக்குள் புகுந்த அரசு பஸ்

டிரைவருக்கு ‘திடீர்’ நெஞ்சுவலி: தாறுமாறாக ஓடிய அரசு பஸ் வீட்டுக்குள் புகுந்தது

Published On 2019-12-07 12:02 GMT   |   Update On 2019-12-07 12:02 GMT
நாகர்கோவில் அருகே அரசு பஸ் டிரைவருக்கு ஏற்பட்ட தீடீர் நெஞ்சுவலியால் தாறுமாறாக ஒடிய பஸ் வீட்டுக்குள் புகுந்தது.
நாகர்கோவில்:

நாகர்கோவிலை அடுத்த குலசேகரன்புதூர் ராமபுரம் சங்கரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 50) அரசு பஸ் டிரைவர்.

நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்டிற்கு செல்லும் அரசு பஸ்சை பாலசுப்பிரமணியன் நேற்று இயக்கி வந்தார்.

நேற்று இரவு 9 மணி அளவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து தேவசகாயம் மவுண்டிற்கு பஸ் சென்றுகொண்டிருந்தது. பஸ்சில் 8 பயணிகள் இருந்தனர். தேரேகால்புதூர் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது டிரைவர் பால சுப்பிரமணியத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனால் பஸ் அவரது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது. இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். திடீரென பஸ் ரோட்டோரத்தில் இருந்த வீட்டிற்குள் புகுந்தது. இதில் வீடு இடிந்து சேதம் அடைந்தது.

வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இன்றி உயிர் தப்பினர்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நெஞ்சு வலியால் அவதிப்பட்ட டிரைவர் பாலசுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News