செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 17ம் கட்ட விசாரணை நிறைவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்று 17-ம் கட்ட விசாரணை நிறைவடைந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட 16 கட்ட விசாரணையில் மொத்தம் 410 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், 17-வது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் ஆஜராக மொத்தம் 38 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், 22 பேர் ஆஜராகி விளக்கமளித்தனர். அவர்கள் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் ஒரு நபர் ஆணையம் இன்று விசாரணையை நடத்தியது.
இதையடுத்து 17-ம் கட்ட விசாரணை நிறைவடைந்தது. அடுத்ததாக, 18-ம் கட்ட விசாரணை ஜனவரியில் தொடங்கும் என ஒரு நபர் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.