செய்திகள்
கைது

வில்லியனூர் அருகே கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட ரவுடி கைது

Published On 2019-12-06 11:59 GMT   |   Update On 2019-12-06 11:59 GMT
வில்லியனூர் அருகே கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கனூர்:

வில்லியனூர் அருகே பிள்ளையார் குப்பத்தை சேர்ந்த ரவுடி அருண் குமாருக்கும், துத்திப்பட்டை சேர்ந்த மற்றொரு ரவுடி வெறி பிரதாபுக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த 24-ந்தேதி இரவு செல்லிப்பட்டு மேம்பாலம் அருகே இரு தரப்பினரும் மோதலுக்கு தயாரானார்கள். அப்போது வெறி பிரதாப் கூட்டாளிகளின் 2 மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 ரவுடிகளும் ஒருவருக்கொருவர் கொலை செய்ய திட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடாத்தூர்- கைக்கிளப்பட்டு சாலையில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த வெறிபிரதாப்பை திருக்கனூர் போலீசார் கைது செய்தனர். மேலும் வெறிபிரதாப்பின் கூட்டாளி பாம் சூர்யாவையும் கைது செய்தனர்.

தொடர்ந்து வெறி பிரதாப்பின் மற்ற கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் வெறி பிரதாப்பின் மற்றொரு கூட்டாளியான பிரபல ரவுடி துத்திப்பட்டை சேர்ந்த குறள் என்ற குறளரசன் வழுதாவூரில் உள்ள கர்ம காரிய கொட்டகையில் பதுங்கி இருப்பதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அப்போது போலீசாரை பார்த்ததும் குறளரசன் தப்பி ஓடினார். இதில் தவறி விழுந்ததில் குறளரசனுக்கு கையில் முறிவு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து குறளரசனை போலீசார் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ரவுடி அருண்குமாரை கொலை செய்ய வெறி பிரதாப்புடன் கொடாத்தூர் காலனியை சேர்ந்த டேவிட், இளஞ்செழியன் ஆகியோரும் வந்ததாக தெரிவித்தான்.

மேலும் அருண்குமாரை கொல்ல நாட்டு வெடி குண்டை எடுத்து வந்ததாகவும், அப்போது அருண்குமார் கூட்டாளிகள் ஏராளமானோர் திரண்டதால் உயிருக்கு பயந்து நாட்டு வெடிகுண்டை செல்லிப்பட்டு பாலத்தின் கீழே புதரில் மறைத்து வைத்துள்ளதாக குறளரசன் தகவல் தெரிவித்தார்.

அந்த தகவலின் அடிப்படையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்தனர். மேலும் குறளரசனை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அருண்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கில் டேவிட், இளஞ்செழியன் ஆகியோரையும் சேர்த்துள்ளனர்.

Tags:    

Similar News