செய்திகள்
நகை பறிப்பு

திருமங்கலத்தில் பட்டப்பகலில் இளம்பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி நகை பறிப்பு

Published On 2019-12-06 10:37 GMT   |   Update On 2019-12-06 10:37 GMT
திருமங்கலத்தில் பட்டப்பகலில் இளம்பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி 9 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்:

திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி சிவன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், டாஸ்மாக் குடோனில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனபிரியா (வயது 28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் திருமங்கலம் புது காலனியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். தினமும் காலை, மாலை 2 குழந்தைகளையும் தன பிரியா பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம்.

அதன்படி நேற்று மாலை தனபிரியா பள்ளியில் இருந்து தனது குழந்தைகளை மொபட்டில் வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.

பள்ளியில் இருந்து சில மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவரை வழிமறித்த மர்ம நபர் அரிவாளை காட்டி மிரட்டி தனபிரியா கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்துக் கொண்டனர்.

அரிவாளால் மிரட்டியதும் குழந்தைகள் கூக்குரலிட்டனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை விரட்டினர்.

உஷாரான அவன் தன்னுடைய கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பினான். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த துணிகர சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News