செய்திகள்
டெங்கு காய்ச்சல்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன்- சிறுமி பலி

Published On 2019-12-06 07:57 GMT   |   Update On 2019-12-06 07:57 GMT
கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சிலுவை புரத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜ். இவரது மகள் ஜெசிந்தா மேரி (5). இச் சிறுமிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தத்தை பரிசோதித்தபோது டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து ஜெசிந்தா மேரியை கடந்த 3-ந்தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுமி ஜெசிந்தா மேரி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

திருப்பூர் மாவட்டம் நாச்சிப்பாளையம் திருமுருகன் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் தர்னிஷ் (8). இவருக்கு காய்ச்சல் இருந்து வந்தது. ரத்தத்தை பரிசோதனை செய்தபோது டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கடந்த 4-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை தர்னிஷ் இறந்தார். கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 35 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 170 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News