செய்திகள்
மதியழகன்.

கல்வராயன்மலையில் வாலிபர் கழுத்தை அறுத்து கொடூர கொலை

Published On 2019-12-05 12:53 GMT   |   Update On 2019-12-05 12:53 GMT
கல்வராயன்மலையில் வாலிபர் கழுத்தை அறுத்து கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கச்சிராயபாளையம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள மலையரசன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 26). விவசாயி. இவரது மனைவி சிவரஞ்சனி (24). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். 

நேற்று மாலை மதியழகன் கொடுந்துறையில் உள்ள ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பொருட்கள் வாங்கி கொண்டு திரும்பிவந்து கொண்டிருந்தார். அப்போது நொச்சிமேடு பகுதியில் சென்றபோது அங்கு மறைந்திருந்த கும்பல் அவரை வழிமறித்தது. அப்போது அவர்கள் திடீரென்று மிளகாய் பொடியை மதியழகன் முகத்தில் தூவினர். 

அவர் கண் எரிச்சல் தாங்க முடியாமல் அலறினார். அப்போது அவர்கள் அரிவாளால் வெட்டினர். மேலும் அவரது கழுத்தை கொடூரமாக அறுத்தனர். இதில் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த மதியழகன் பரிதாபமாக இறந்துவிட்டார். அதன்பின்பு அவர்கள் மதியழகனின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு சென்றுவிட்டனர். இதற்கிடையே ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற மதியழகன் வீடு திரும்பாததால் அவரது மனைவி ரஞ்சனி மற்றும் உறவினர்கள் கவலையடைந்தனர். அக்கம் பக்கம் தேடி பார்த்தனர். எங்கும் அவரை காணவில்லை.

இதற்கிடையே நொஞ்சிமேடு சாலையின் ஓரம் புதரில் கழுத்து அறுக்கப்பட்டு எரிந்த நிலையில் வாலிபர் ஒருவர் பிணம் கிடப்பதாக கரியலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், கரியலூர் இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்- இன்ஸ்பெக்டர் துரைராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டனர். பின்னர் விசாரணை நடத்திய போது கழுத்தை அறுத்த கொலை செய்யப்பட்டவர் மலையரசன் பட்டு கிராத்தை சேர்ந்த மதியழகன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதைகேட்டதும் மதியழகனின் மனைவி சிவரஞ்சனி மற்றும் உறவினர்கள் அலறியடித்துக்கொண்டு நொச்சிமேடு பகுதிக்கு சென்றனர். அங்கு பிணமாக கிடந்த மதியழகனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். பின்பு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மதியழகன் சொத்து தகராறில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மதியழகனுக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி மாணிக்கம் (55) என் பவருக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக அவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்தனர். இதனால் மாணிக்கம் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து மதியழகனை கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவர் குடும்பத் துடன் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

கொலையாளியை பிடிக்க போலீஸ்சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையில் இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தலைமறைவாகி விட்ட மாணிக்கத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். வாலிபர் கழுத்தை அறுத்து கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News