செய்திகள்
கைதான 2 பேரை படத்தில் காணலாம்

கோவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 2 பேர் கைது

Published On 2019-12-05 07:32 GMT   |   Update On 2019-12-05 07:32 GMT
கோவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்காநல்லூர்:

கோவை சிங்காநல்லூர் போலீஸ் நிலையம் அருகே திருச்சி ரோட்டில் சிப்ஸ் கடை செயல்பட்டு வருகிறது.

நேற்று மாலை இந்த கடைக்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சில பொருட்களை கடையில் வாங்கினர். பின்னர் கடை உரிமையாளரிடம் வாங்கிய பொருளுக்காக 500 ரூபாய் நோட்டை கொடுத்தனர். அதனை கடை உரிமையாளர் வாங்கி பார்த்தார்.

அப்போது அந்த பணத்தின் மீது சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் நோட்டை பரிசோதனை செய்தார். அப்போது அது கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இந்த நிலையில் சிங்காநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர்கள் ஓடுவதை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் விரட்டி சென்று 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர்கள் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ரசல் பிரான்சிஸ் (வயது 28) என்பதும், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் வடகரையை சேர்ந்த பாஸ்கர் (35) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

போலீசாரிடம் ரசல் பிரான்சிஸ் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் பி.டெக் படித்து விட்டு பணம் பரிமாற்றம் செய்யும் வேலை செய்து வந்தேன். ஆனால் அதில் போதிய வருமானம் கிடைக்காததால் சிக்கிரம் பணம் சம்பாதித்து பணக்காரணாக ஆசைப்பட்டு ஓமனுக்கு வேலைக்கு சென்றேன்.

அப்போது அங்கு பாஸ்போர்ட் பிரச்சினையில் சிக்கி ஓமன் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்தேன்.

அப்போது தான் இதே வழக்கில் ஜெயிலில் இருந்த பாஸ்கருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் விடுதலையாகி சொந்த ஊருக்கு வந்தோம்.

பின்னர் அடிக்கடி நாங்கள் இருவரும் கோவையில் சந்தித்து கள்ளநோட்டுகளை கடையில் கொடுத்தும் மாற்றம் செய்து வந்தோம். தற்போது ஒரு கடையில் பொருட்கள் வாங்குவதற்காக மாற்றும்போது மாட்டிக்கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் அவர்களிடம் கள்ள நோட்டு எப்படி வந்தது? கோவையில் இது போன்று வேறு எங்கேயாவது கள்ள நோட்டுகளை மாற்றினார்களா? கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

கள்ள நோட்டுகளை வாலிபர்கள் மாற்ற முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News