மதுரவாயல் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற ரவுடி கைது
போரூர்:
தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்- இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு பைபாஸ் சாலை அருகே உள்ள போரூர் கார்டன் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக மொபட்டில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறிய வாலிபரை சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பிரபல ரவுடியான செங்குன்றம் அலமாதி பகுதியைச் சேர்ந்த சீனு என்கிற அறுப்பு சீனு என்று தெரிய வந்தது.
சீனுவை கைது செய்த போலீசார் அவரது வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 6கிலோ கஞ்சா, மொபட்டையும் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வரும் சீனு அதை சிறிய பொட்டலங்கள் மூலம் இரவு நேரங்களில் கல்லூரி மாணவர்களுக்கு “டோர் டெலிவரி” செய்து வந்தார். சீனு மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது.