செய்திகள்
குடவாசல் அருகே ஆற்றில் குளிக்க சென்ற முதியவர் மாயம்
குடவாசல் அருகே ஆற்றில் குளிக்க சென்ற முதியவர் மாயமானார். தீயணைப்பு வீரர்கள் அவரை 2 நாட்களாக தேடி வருகிறார்கள்.
குடவாசல்:
குடவாசல் அருகே உள்ள காங்கேயநகரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 65). விவசாயி. இவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள சுள்ளான் ஆற்றுக்கரையில் ஆடு மேய்த்துவிட்டு மதியம் சாப்பாட்டிற்கு செல்ல ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளார். அப்போது தண்ணீர் வேகமாக சென்றதால் ஆற்றில் அவர் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சாமிநாதனின் வேட்டி, துண்டு ஆற்றின் கரையில் இருந்துள்ளது. எனவே சாமிநாதன் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது.
இதுகுறித்து குடவாசல், வலங்கைமான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 30 பேர் வெட்டாற்றில் 2 தினங்களாக தீவிரமாக தேடுகிறார்கள். வெட்டாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.