செய்திகள்
கொலை

சொத்து தகராறில் பெண் கழுத்தை அறுத்துக் கொலை- கணவர் வெறிச்செயல்

Published On 2019-12-03 10:27 GMT   |   Update On 2019-12-03 10:27 GMT
கோவை அருகே சொத்து தகராறில் மனைவியை கணவர் கழுத்தை அறுத்து கொன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை:

கோவை அருகே உள்ள கோவில் பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி(74). இவரது மனைவி ராதாமணி (65). இவர்கள் இருவரும் அங்கு மாட்டு இறைச்சி கடை நடத்தி வந்தனர்.

இவர்களுக்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். ராதாமணி தனது சொத்துக்களை மகள் பெயருக்கு எழுதி வைத்து உள்ளார். இது 3 மகன்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் தந்தை பழனிசாமியிடம் சென்று இது குறித்து அடிக்கடி கேட்டு வந்தனர். இதனை தனது மனைவியிடம் பழனிசாமி கேட்டுள்ளார். ஏன் மகள் பெயருக்கு மட்டும் சொத்தை எழுதி வைத்து இருக்கிறாய்? மகன்கள் என்னுடன் இது தொடர்பாக தகராறு செய்கிறார்கள் என கேட்டுள்ளார்.

இது தொடர்பாக பழனிசாமிக்கும் அவரது மனைவி ராதாமணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த பழனிசாமி வீட்டில் இருந்த அரிவாளால் மனைவி கழுத்தை சரமாரியாக அறுத்தார். இதில் ராதாமணி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே இறந்தார். பின்னர் அரிவாளை அங்கு வைத்து விட்டு பழனிசாமி தப்பி ஓடி விட்டார்.

இந்த கொலை குறித்து கோவில் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பழனிசாமி வீட்டிற்கு விரைந்து வந்தனர்.

அங்கு கிடந்த அரிவாளை பறிமுதல் செய்தனர். பின்னர் ராதாமணி உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய பழனிசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். சொத்து தகராறில் மனைவி கழுத்தை கணவர் அறுத்து கொன்ற சம்பவம் கோவில்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News