செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

ரி‌ஷிவந்தியம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

Published On 2019-11-29 16:06 GMT   |   Update On 2019-11-29 16:06 GMT
ரி‌ஷிவந்தியம் அருகே வயலை பார்வையிட சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ரி‌ஷிவந்தியம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரி‌ஷிவந்தியம் அருகே உள்ள அவிரியூர் கிராமத்தை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணகுமார் மகன் அருள்(வயது 32), விவசாயி. இவருக்கு பிரேமா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். அருள் நேற்று முன்தினம் மாலை தனது வயலை பார்வையிட சென்றார். வரப்பில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரது உடல் வரப்பு அருகே நடப்பட்டிருந்த இரும்பு மின்கம்பம் மீது உரசியது. அப்போது எதிர்பாராதவிதமாக அருள் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் இதுபற்றி பகண்டை கூட்ரோடு போலீஸ் நிலையத்துக்கும், அருள் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதனால் பதறிய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த அருளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் தலைமையிலான போலீசார் மின்சாரம் தாக்கி பலியான அருளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி பிரேமா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயலை பார்வையிட சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News