செய்திகள்
தற்கொலை

ஆரல்வாய்மொழியில் திருமணமான 26 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை

Published On 2019-11-29 11:45 GMT   |   Update On 2019-11-29 11:45 GMT
ஆரல்வாய்மொழியில் இன்று பூட்டிய அறைக்குள் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில்:

ஆரல்வாய்மொழி வடக்கூரை சேர்ந்தவர் மேகலிங்கம் (வயது 30). புத்தேரியில் உள்ள அரசு வங்கியில் மேகலிங்கம் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் புத்தேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 3-ந் தேதி திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு கணவனும், மனைவியும் ஆரல்வாய் மொழியில் வசித்து வந்தனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன்- மனை விக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் மேகலிங்கமும் அவரது மனைவியும் மனம் உடைந்தனர். இந்த நிலையில் மேகலிங்கத்தின் மனைவியின் சகோதரருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரது திருமணம் நாளை மறுநாள் நடக்க இருந்தது. இதற்காக மேகலிங்கத்தின் மனைவி, நேற்றே பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேகலிங்கம் மட்டும் வீட்டில் இருந்தார்.

மேகலிங்கம் நேற்று வங்கிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். இரவில் சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்க சென்றார். இன்று காலையில் நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்பட வில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மேகலிங்கம் தூக்கு போட்டு இறந்து கிடந்தார்.

அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இது பற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மேகலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மேகலிங்கம் தற்கொலை செய்தது ஏன்? என்பது பற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் முடிந்த 26 நாளில் வங்கி ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆரல்வாய்மொழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News