செய்திகள்
சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னையில் நாளையும் நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மழை முன்னறிவிப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நாளையும் நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சூறாவளிக் காற்று வீசும் என்பதால் 2 நாட்களுக்கு மீனவர்கள் வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவில், தஞ்சை கீழணை பகுதியில் தலா 12 செமீ மழை பதிவாகி உள்ளது. மயிலாடுதுறை, ஆனைக்காரன்சத்திரம், லால்பேட்டை ஆகிய பகுதிகளில் தலா 8 செமீ மழை பெய்துள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.