செய்திகள்
குடிநீர் வழங்காததை கண்டித்து கரூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதை படத்தில் காணலாம்.

குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Published On 2019-11-28 17:50 GMT   |   Update On 2019-11-28 17:50 GMT
குடிநீர் வழங்காததை கண்டித்து கரூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கரூர்:

கரூர் நகராட்சி 23-வது வார்டு பகுதிக்குட்பட்ட வெங்கடாசல சந்து மற்றும் கிழக்கு நஞ்சை தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக காவிரி குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு இடங்களில் குடிநீருக்காக சுற்றித்திரிந்தும் கிடைக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று கரூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் நகராட்சி ஆணையர் சுதா தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் முற்றுகையிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வெங்கடாசல சந்து மற்றும் கிழக்கு நஞ்சை தெரு பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் ஏதேனும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும், ஓரிரு நாட்களில் அவை சரிசெய்யப்பட்டு தொடர்ந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் கரூர் நகராட்சி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News