செய்திகள்
திண்டுக்கல் அருகே லாரி மோதி வாலிபர் பலி
திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆத்தூர்:
திண்டுக்கல் அருகே உள்ள மைக்கேல்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 20). கூலித் தொழிலாளி. நேற்று இரவு மைக்கேல்பாளையத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். பித்தளைப்பட்டி அருகே வந்தபோது நாமக்கல்லில் இருந்து உசிலம்பட்டிக்கு முட்டை ஏற்றி வந்த லாரி அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் சென்டர் மீடியனில் தூக்கி வீசப்பட்ட ஜஸ்டின் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீசார் அங்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.