செய்திகள்
கரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து கரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர்:
கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்டீபன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் நகர தலைவர் சவுந்தர்ராஜன் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் 8.1 சத வீதம் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் வங்கிகளில் சீர்திருத்தம் எனக் கூறிக்கொண்டு பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை முடக்குகின்றனர். பி.எஸ்.என்.எல்., ரெயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது நாட்டின் எதிர்காலத்துக்கு ஆபத்தாகும். மராட்டிய அரசியலில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது எனக்கூறி பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரசார் கோஷம் எழுப்பினார்கள். இதில், வர்த்தக பிரிவு லியோ சதீஷ், முன்னாள் வட்டார தலைவர் சிவசாமி, மாவட்ட துணை தலைவர் குமார், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பழனிகுமார், மகளிரணி மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.