செய்திகள்
பொங்கல் பரிசு (கோப்புப்படம்)

2 கோடி கார்டுகளுக்கு 1,000 ரூபாய் பொங்கல் பரிசு- ரூ.2,363 கோடி ஒதுக்கியது தமிழக அரசு

Published On 2019-11-27 08:40 GMT   |   Update On 2019-11-27 08:40 GMT
பொங்கல் திருநாளையொட்டி 2 கோடி கார்டுகளுக்கு 1,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவதற்காக தமிழக அரசு ரூ.2,363 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
சென்னை:

பொங்கல் திருநாளையொட்டி கடந்த ஆண்டு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டது.
அதே போல இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்காக ரூ.1,000 ரொக்கமும், பொங்கல் பரிசும் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

இதற்காக தமிழக அரசு ரூ.2363.13 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அரசாணை இன்று பிறப்பிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில்  பொது வினியோக  திட்டத்தில் அரிசி உள்ளிட்ட  பொருட்கள் வாங்கும் ரேஷன் கார்டு தாரர்களின் எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சத்து 5 ஆயிரத்து 846 ஆகும்.

இந்த கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக 1,000 ரூபாய் வழங்க கள்ளக்குறிச்சியில்  நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.


இதன்படி ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 1,000 ரூபாய் பணத்துடன் பொங்கல் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் வழங்கப்படும்.

தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலம் இவற்றை வினியோகம் செய்ய ரூ.2363 கோடியே 13 லட்சம் நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதில் 1 கோடியே 95 லட்சத்து 5 ஆயிரத்து 846 கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 வழங்க நிதி ஒதுக்கீடுக்கு அனுமதிக்கப்படுகிறது.

பச்சரிசிக்கு ரூ.54 கோடியே 32 லட்சத்து 42 ஆயிரத்து 100-ம், சர்க்கரைக்கு ரூ.92 கோடியே 65 லட்சத்து 35 ஆயிரமும், 2 அடி நீள கரும்புக்கு லாரி வாடகையுடன் சேர்த்து ரு.29 கோடியே 26 லட்சமும், முந்திரி திராட்சை, ஏலக்காய் வாங்க ரூ.78 கோடியே 2 லட்சத்து 33 ஆயிரத்து 84-ம், இவைகளை துணி பையில் போட்டு கொடுக்க ரூ.39 கோடியே 1 லட்சத்து 16 ஆயிரத்து 920-ம் நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் 29-ந்தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளதால் அந்த செலவினத்தை கருதி அதற்கும் சேர்த்து மொத்தமாக ரூ.2,363.13 கோடி நிதி ஒதுக் கீடு செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதன் மூலம் மொத்தம் 2 கோடி ரேஷன் அட்டை தாரர்கள் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1,000 பணம் பெற நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News