செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

செங்குன்றம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

Published On 2019-11-26 07:27 GMT   |   Update On 2019-11-26 07:27 GMT
செங்குன்றம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்குன்றம்:

செங்குன்றத்தை அடுத்த பவானி நகர் அரிச்சந்திரன் தெருவை சேர்ந்தவர் ராஜவேல். நெல் வியாபாரி. இவரது மனைவி காவேரி (வயது 32).

இவர்களது மகன்கள் சூரியபிரகாஷ் (9), ரித்தீஷ் (7). எம்.ஏ.நகரில் உள்ள தனியார் பள்ளியில் சூரியபிரகாஷ் 4-ம் வகுப்பும், ரித்தீஷ் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

இவர்கள் தினமும் பள்ளி வேனில் செல்வது வழக்கம். இன்று காலை காவேரி, அவரது மாமியார் பத்மாவதி ஆகியோர் சூரியபிரகாஷ், ரித்தீசை பள்ளி வேனில் ஏற்றி விடுவதற்காக வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தனர்.

அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து காவேரி சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவரது மகன்கள் சூரிய பிரகாஷ், ரித்தீஷ், மாமியார் காவேரி ஆகியோரும் மின்சாரம் தாக்கியதில் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சூரியபிரகாஷ், பத்மாவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவன் ரித்தீஷ் லேசான காயத்துடன் வீடு திரும்பினார்.

இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட் டது.

பலியான காவேரியின் உடல் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர் பீட்டர், சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘கடந்த 3 மாதத்துக்கு முன்பு இதே போல் மின்கம்பி அறுந்து விழுந்ததில் 2 மாடுகள் இறந்தன.

அப்போதே மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பியின் தரத்தை ஆய்வு செய்து இருந்தால் மீண்டும் உயர் பலி ஏற்பட்டு இருக்காது. இதற்கு மின்வாரிய அலட்சியமே காரணம். இதனை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளோம்’ என்றனர்.

Tags:    

Similar News